This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Urdu
Cyrillic/Russian
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
11.009 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி (திருக்கயிலாயம் ) |
Back to Top
நக்கீரதேவ நாயனார் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
11.009  
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
பண் - (திருத்தலம் திருக்கயிலாயம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்பாகற் கேற்றினேன் பெற்று.
| [1] |
பெற்ற பயன்இதுவே யன்றே பிறந்தியான் கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் கொற்றவர்க்குத் தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக் காளாகப் பெற்றேன் அடைந்து.
| [2] |
அடைந்துய்ம்மின் அம்மானை உம் ஆவி தன்னைக் குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றங்கு அடைந்துநும் கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத் தண்ணலே கண்டீர் அரண்.
| [3] |
அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ முரணம்பு கோத்த முதல்வன் சரணமே காணுமால் உற் றன்றன் காளத்தி கைதொழுது பேணுமால் உள்ளம் பெரிது.
| [4] |
பெரியவர் காணீர்என் உள்ளத்தின் பெற்றி தெரிவரிய தேவாதி தேவன் பெரிதும் திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை இருத்தத்தான் போந் திடம்.
| [5] |
இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த மடப்பாவை தன்டிவே யானால் விடப்பாற் கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க் கொருவடிவே அன்றால் உரு.
| [6] |
உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும் ஒருவன் ஒருபால் இருக்கை மருவினிய பூக்கயிற்கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சும் மாக்கயிலை என்னும் மலை.
| [7] |
மலைவரும்போர் வானவரும் தானவரும் எல்லாம் அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி நிலைதளரக் கண்டமையால் தண்சாரற் காலத்தி ஆள்வார்நஞ் சுண்டமையால் உண்டிவ் வுலகு.
| [8] |
உலக மனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட திலக மெனப்பெறினும் சீசீ இலகியசீர் ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே பேசா திருப்பார் பிறப்பு.
| [9] |
பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும் சிறப்புடை ரானாலும் சீசீ இறப்பில் கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார் அடியாரைப் பேணாதவர்.
| [10] |
அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி எவரும் தொழுதேத்தும் எந்தை சிவம்மன்னு தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே போக்குவார் வாளா பொழுது.
| [11] |
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர் கோளர்கொல் அந்தோ கிறிப்பட்டார் கீளாடை அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற கண்ணப்ப ராவார் கதை.
| [12] |
கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப் புதையிருட்கண் மாலோடும் சென்று சிதையாச்சீர்த் தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில் பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.
| [13] |
பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே தொண்டு படுவான் தொடர்வேனைக் கண்டுகொண் டாளத் தயாஉண்டோ இல்லையோ சொல்லாயே காளத்தி யாய்உன் கருத்து.
| [14] |
கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண இருத்தி திருக்கயிலை என்றால் ஒருத்தர் அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோ நெறிவார் சடையாய் நிலை
| [15] |
நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத் தலைவ தடுமாறு கின்றேன் தொலைவின்றிப் போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர் வேந்தே இப் பாசத்தை விட்டு.
| [16] |
பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழே என் நேசத்தை வைக்க நினைகண்டாய் பாசத்தை நீக்குமா வல்ல கயிலாயா நீஎன்னைக் காக்குமா றித்தனையே காண்.
| [17] |
காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப் பூணார மார்பன்றன் பொற்பாதம் நாணாதே கண்டிடுவான் யான்இருந்தேன் காணீர் கடல்நஞ்சை உண்டிடுவான் றன்னை ஒருங்கு.
| [18] |
ஒருங்கா துடனேநின் றொர்ஐவர் எம்மை நெருங்காமல் நித்தம் ஒருகால் நெருங்கிக் கருங்கலோங் கும்பற் கயிலாயம் மேயான் வருங்கொலோ நம்பால் மதித்து.
| [19] |
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே வம்பார் மலர்தூய் வணங்காதே நம்பா நின் சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன் காலங்கள் போன கழிந்து.
| [20] |
கழிந்த கழிகிலாய் நெஞ்சே கழியாது ஒழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் மொழிந்தசீர்க் கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை நண்ணுதலாம் நன்மை நமக்கு.
| [21] |
நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர் தமக்கழகு தாமே யறிவார் அமைப்பொதும்பின் கல்லவாம் நீடருவிக் காளத்தி யாள்வாரை வல்லவா நெஞ்சமே வாழ்த்து.
| [22] |
வாழ்த்துவாய் வாழ்த்தா தொழிவாய் மறுசுழியிட்டு ஆழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே யாழ்த்தகைய வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே கண்டாய் அடியேன் கடன்.
| [23] |
கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக் கடனாகக் கைதொழுவார்க் கில்லை இடம்நாடி இந்நாட்டிற் கேவந்திங் தீண்டிற்றுக் கொண்டுபோய் அந்நாட்டில் உண்டுழலு மாறு.
| [24] |
மாறிப் பிறந்து வழியிடை யாற்றிடை ஏறி யிழியும் இதுவல்லால் தேறித் திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும் இருக்கையிலை கண்டீர் இனிது.
| [25] |
இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக் கனிதேர் கடுவன்கள் தம்மில் முனிவாய்ப் பிணிங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணி வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.
| [26] |
மகிழ்ந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய் நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் திகழ்ந்திலங்கும் விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என் பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.
| [27] |
பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம் ஏசும் பரிசானா ளேபாவம் மாசுனைநீர் காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.
| [28] |
போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும் தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் மூர்த்தி குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும் கயிலாயா யான்காணக் காட்டு. | [29] |
காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப் போய் நாட்டிற் பலிதிரிந்து நாள்தோறும் ஓட்டுண்பார் ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை வானோர் வணங்குமா வந்து.
| [30] |
வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல் கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மணிமுடிமேல் பால்உகுத்த மாணிக்குப் பண்டு.
| [31] |
பண்டிதுவே அன்றா கில் கேளீர்கொல் பல்சருகு கொண்டிலிங்கத் தும்பின்னூற் கூடிழைப்பக் - கண்டு நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர் சிலந்திக்குச் செய்த சிறப்பு.
| [32] |
செய்த சிறப்பெண்ணில், எங்குலக்கும் சென்றடைந்து கைதொழுவார்க் கெந்தை கயிலாயர் - நொய்தளவில் காலற்காய்ந் தாரன்றே காணீர் கழல்தொழுத பாலற்காய் அன்று பரிந்து.
| [33] |
பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம் பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர் நாதா வா காளத்தி நம்பா வா என்றென்றென் மாதாவா உற்ற மயல்.
| [34] |
மயலைத் தவிர்க்கநீ வாராய் ஒரு மூன் றெயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப் பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே யிருப்பதவா வுற்றாள் இவள்.
| [35] |
இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல் இன்றே தவளப் பொடியிவள்மேல் சாத்தி - இவளுக்குக் காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை சூட்டுமின்கள் தீரும் துயர்.
| [36] |
துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர் ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ மேற்றான் இதற்கு விளைவு
| [37] |
விளையும் வினை அரவின் வெய்ய விடத்தைக் களைமினோ காளத்தி ஆள்வார் - வளைவில் திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும் மருந்தினைநீர் வாயிலே வைத்து.
| [38] |
வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித் தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத் தெம்பெருமான் ஓர்அஞ் செழுத்து.
| [39] |
அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகா ளாவனவும் அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த காளத்தி யாருக்கும் காண்டற் கரிதாய்ப்போய் நீளத்தே நின்ற நெறி.
| [40] |
நெறிவார் சடையாய் நிலையின்மை நீஒன் றறியாய்கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியில் கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை நினைத்தருவி கண்சோர நின்று.
| [41] |
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம் என்றும் நினைந்தாலும் என்கொலோ - சென்றுதன் தாள்வா னவர் இறைஞ்சும் தண்சாரற் காளத்தி ஆள்வான் அருளாத வாறு.
| [42] |
அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந் திம்மையே தீர்க்கும் இடர்.
| [43] |
இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க் கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.
| [44] |
உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய் புணருங்கால் ஆரமுதே போலும் - இணரில் கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய், இனியவா காண்நின் இயல்பு.
| [45] |
நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால் மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில் வெளிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால் ஒளிப்பதுவுமா னால் உரை.
| [46] |
உரையும் பொருளும் உடலும் உயிரும் விரையும் மலரும்போல் விம்மிப் - புரையின்றிச் சென்றவா றோங்கும் திருக்கயிலை எம்பெருமான் நின்றவா றெங்கும் நிறைந்து.
| [47] |
நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின் மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய் பணியாயால் என்முன் பரிசு.
| [48] |
பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும் கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும் புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும் பரமா அடியேற்குப் பற்று.
| [49] |
பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே முற்றாவெண் திங்கள் முளைசூடி - வற்றாவாம் கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற மங்கைசேர் பாகத்து மன்.
| [50] |
மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம் பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும் மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற தென்செய்வான் எந்தாய் இயம்பு.
| [51] |
இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் - புயம்பாம்பால் ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே ஏத்தாதே வாளா இருந்து.
| [52] |
இருந்தவா காணீர் இதுவென்ன மாயம் அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த் தானாளும் பிச்சை புகும்போலும் தன் அடியார் வானாள மண்ணாள வைத்து.
| [53] |
வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர் அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால் எக்காலத் தெப்பிறவி யான்.
| [54] |
யானென்று தானென் றிரண்டில்லை என்பதனை யானென்றுங் கண்டிருப்பனா னாலும் - தேனுண் டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான் தெளிகொடான் மாயங்கள் செய்து.
| [55] |
மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று காயங்கொண் டாடல் கணக்கன்று - காயமே நிற்பதன் றாதலால் காளத்தி நின்மலன்சீர் கற்பதே கண்டீர் கணக்கு.
| [56] |
கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக் காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற் சூலத்தான் பாதம் தொழு.
| [57] |
தொழுவாள் பெறாளே தோள்வளையும் தோற்றாள் மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள் நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப் பெறுமாறு காணீர்என் பெண்.
| [58] |
பெண்இன் றயலார்முன் பேதை பிறைசூடி கண்நின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத் தாமம்தா மற்றிவளைச் சார்ந்து.
| [59] |
சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் - கூர்ந்துள்ளே மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும் காளத்தி யார்தம் கழல்.
| [60] |
தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன் சலன் என் றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத் தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய்நீ கூத்தாடல் மேவியவா கூறு.
| [61] |
கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீறாவும் மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச் செஞ்சடைஎம் ஈசன் திறம்.
| [62] |
ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல் மாசில் நிறத்த மடக்குருகே - கூசி இருத்தியாய் நீயும் இருங்கயிலை மேயாற் கருத்தியாய்க் காமுற்றா யாம்.
| [63] |
காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே யாமுற்ற துற்றாய் இருங்கடலே யாமத்து ஞாலத் துயிரெல்லாம் கண்துஞ்சும் நள்ளிருள்கூர் காலத்தும் துஞ்சாதுன் கண்.
| [64] |
கண்ணும் கருத்துங் கயிலாய ரேஎமக்கென் றெண்ணி யிருப்பவன்யான் எப்பொழுதும் நண்ணும் பொறியா டரவசைத்த பூதப் படையார் அறியார்கொல் நெஞ்சே அவர்.
| [65] |
நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை அஞ்சேல்என் றாட்கொண் டருள்செய்வார் நஞ்சேயும் கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர் அண்டத்தார் சூடும் அலர்.
| [66] |
அலரோன்நெடுமால் அமரர்கோன் மற்றும் பலராய்ப் படைத்துக்காத் தாண்டு - புலர்காலத் தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான் குன்றாத சீர்க்கயிலைக் கோ.
| [67] |
கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக் கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் -பார்த்தலுமே பண்பொழியாக் கோபத்தீப் பற்றுதலும் பற்றற்று வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.
| [68] |
வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஒர் செந்தறுகண் கேழல் திறம்புரிந்து வந்தருளும் கானவனாம் கோலமியான் காணக் கயிலாயா வானவர்தம் கோமானே வா.
| [69] |
வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல் தாமார் உலகில் தவமுடையார் தாம்யார்க்கும் காண்டற் கரியராய்க் காளத்தி யாள்வாரைத் தீண்டத்தான் பெற்றமையாற் சென்று.
| [70] |
சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய் என்றும் அடியார்க்கு முன்னிற்பர் நன்று கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார் இனியவா பத்தர்க் கிவர்.
| [71] |
இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார் இவர் அல்லர் என்றிருக்க வேண்டா கவராதே காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி யாள்வார்நீர் ஆதரித்த தெய்வமே யாம்.
| [72] |
ஆம்என்று நாளை உள என்று வாழ்விலே தாம்இன்று வீழ்தல் தவமன்று - யாமென்றும் இம்மாய வாழ்வினையே பேணா திருங்கயிலை அம்மானைச் சேர்வ தறிவு.
| [73] |
அறியாம லேனும் அறிந்தேனும் செய்து செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து பொன்முகலி ஆடுதலும் போம்.
| [74] |
போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும் ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால் உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய் விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.
| [75] |
வேறேயும் காக்கத் தகுவேனே மெல்லியலாள் கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும் அன்பா அடியேற் கருளா தொழிகின்ற தென்பாவ மேயன்றோ இன்று.
| [76] |
இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக் கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என் னுட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத் திட்காதே விண்ணப்பஞ் செய்.
| [77] |
செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் - பையவே காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம் போரேறே இத்தெருவே போது.
| [78] |
போது நெறியனவே பேசி நின் பொன்வாயால் ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால் கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான் வண்தார்மோந் தென்குழற்கே வா.
| [79] |
வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக் கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஒவாதே பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக் கோமான் வர ஒருகாற் கூவு.
| [80] |
கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுக என் றேவினான் பொறிகயிலை எம்பெருமான் - மேவியசீர் அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால் தன்பால்பால் வேண்டுதலும் தான்.
| [81] |
தானே உலகாள்வான் தான்கண்ட வா வழக்கம் ஆனான்மற் றார்இதனை அன் றென்பார் - வானோர் களைகண்தா னாய்நின்ற காளத்தி யாள்வார் வளைகொண்டார் மால்தந்தார் வந்து.
| [82] |
வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத் தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ இடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற் கிடந்தார் வலியெலாங் கெட்டு.
| [83] |
கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல் பட்டதுவும் ஒராது பண்டொருநாள் - ஒட்டக் கலந்தரனார் காளத்தி யாள்வார்மேற் சென்று சலந்தரனார் பட்டதுவும் தாம்.
| [84] |
தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல் சார்வரே காம்புற்ற செந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார் தூரத்தே போவார் தொழுது.
| [85] |
தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும் வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப் பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள் எத்தனையும் சேய்த்தாக என்று.
| [86] |
வென்றைந்தும் காமாதி வேரறுத்து மெல்லவே ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை மானுடையான் என்னை உடையான் வடகயிலை தானுடையான் தன்னுடைய தாள்.
| [87] |
தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில் தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால் திக்கனைத்தும் போர்க்கும் திறற்காளி காளத்தி நக்கனைத்தான் கண்ட நடம்.
| [88] |
நடம்ஆடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான் படம்ஆடும் பாம்பணையான் காணான் - விடம்மேவும் காரேறு கண்டன் கயிலாயன் றன்உருவை யாரே அறிவார் இசைந்து.
| [89] |
இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக் காட்டுமேல் காட்டிக் காலந்தென்னைத் தன்னோடும் கூட்டுமேல் கூடவே கூடு.
| [90] |
கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள் நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி வடகயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில் அடகயில ஆரமுதை விட்டு.
| [91] |
விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயிற் பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாவாம் கள்அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற வள்ளலைச்சென் றேத்த மனம்.
| [92] |
மனம்முற்றும் மையலாய் மாதரார் தங்கள் கனம்உற்றும் காமத்தே வீழ்வர் - புனமுற் றினக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான் றனக்குறவு செய்கலார் தாழ்ந்து.
| [93] |
தாழ்ந்த சடையும் தவளத் திருநீறும் சூழ்ந்த புலிஅதளும் சூழ்அரவும் - சேர்ந்து நெருக்கி வானோர் இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க் கிருக்கும் மா கோலங்கள் ஏற்று.
| [94] |
ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல் வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத் தெம்பெருமான் என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.
| [95] |
ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும் நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான் நல்ல படுகின்ற வண்ணம் பணி.
| [96] |
பணியாது முன்இவனைப் பாவியேன் வாளா கணியாது காலங் கழித்தேன் - அணியும் கருமா மிடற்றெம் கயிலாயத் தெங்கள் பெருமான தில்லை பிழை.
| [97] |
பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல் அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும் என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி மன்னா தருவாய் வரம்.
| [98] |
வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும் பரமா உன் பாதார விந்தம் - சிரம்ஆர ஏத்திடும்போ தாகவந் தென்மனத்தில் எப்பொழுதும் வாய்த்திடுநீ வேண்டேன்யான் மற்று.
| [99] |
மற்றுப் பலிபிதற்ற வேண்டா மடநெஞ்சே கற்றைச் சடையண்ணல் காளத்தி - நெற்றிக்கண் ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும் சோராமல் எப்பொழுதுஞ் சொல்.
| [100] |
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400